மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 31 மார்ச், 2010

மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/medicines.jpg
காலாவதியான மருந்துகளைப் புதிய லேபிள்களில் அடைத்தும், போலி மருந்துகளைத் தயாரித்தும் தமிழகமெங்கும் விற்பனை செய்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. இருப்பினும் இது புதிய செய்தியல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’கேப்ஸ்யூல்ஸ்’ எனப்படும் கூட்டு மாத்திரையில் வெறும் மஞ்சள் பொடியை அடைத்து விற்பனை செய்த கம்பெனியொன்று பஞ்சாப்பில் பிடிபட்டதை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதுதான் இது போன்று நடப்பதைப்போல செய்திகள் பரப்பப்படுகின்றன.

போலி மருந்து எனும் சொல்லே மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாக இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன? குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், என எத்தனையாயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணமடைந்திருப்பார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள்? அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் போலி, மற்றும் காலாவதியான மருந்துகள் இருக்கிறதா? அரசு மருத்துவமனைகளிலே ஒரு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் சாகக்கூடிய இந்தியாவில் இக்கேள்விகள் எதற்கும் பதிலில்லை.

மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், எனப் படித்திருக்கிறோம், பார்த்துமிருக்கிறோம். அவர்களெல்லாம் மருந்துகளினால் பலனின்றி உயிரிழந்தார்களா? அல்லது மருந்துகளின் பலனால் உயிரிழந்தார்களா? யாருக்கும் தெரியாது. மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைபாதகச் செயலை நம்மால் மன்னிக்க முடியுமா?

ஏராளமான அல்லது போதுமான அளவிற்கு சொத்து; கையிருப்பாகக் கணிசமாகப் பணம்; அதிகபட்ச செலவுகளையும் கூடத் தாக்குப் பிடிக்குத் தாண்டுமளவிற்கான சேமிப்பு; எல்லாச் செலவுகளும் போக மீதம் வரக்கூடிய அளவிற்கான மாத வருமானம்; எதற்கும் எந்தப் பய தயவும் தேவையில்லை என யாரையும் எதிர்பாராது இறுமாப்போடு வாழும் நிலை; இவைகளெல்லாமிருப்பதால் சமூகம், நாடு, மக்கள் குறித்த அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை என சுயநலத்தோடு தெனாவட்டாக பேசிக்கொண்டு வாழ்கின்ற பலர் கூட இந்தப் போலி மருந்துச் செய்தியைக் கேட்டுப் பதறுகிறார்கள். இந்தப் பதட்டம் தரும் டென்ஷனினால் ஏற்கனவே பிரஷ்ஷருக்காகப் பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்குகிறார்கள்,

தற்போது சரணடைந்து சிறையிலிருக்கிற மீனாட்சிசுந்தரம் விற்பனை உரிமம் எடுத்திருந்த மருந்துக் கம்பெனியை ஒரு பன்னாட்டு மருந்துக் கம்பெனி வாங்கும்போது அதன் விற்பனையைக் குறித்த அறிக்கையை ஆய்வு செய்த போதுதான் இந்த விசயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.. தாங்கள் செய்கிற வேலையை ஒரு மீனாட்சி சுந்தரம் செய்வதா? என்கிற வகையில் தான் இந்த விசயத்தைக் கசிய விட்டிருக்கிறது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி. நித்யானந்தாவைத் தர்மானந்தா போட்டுக்கொடுத்தது போல ஒரு காலாவதியை ஒரு போலி போட்டுக்கொடுத்த நல்ல காரியம் நடந்திருக்கிறது. ஆனாலும் இதன் முழுப்பரிமாணத்தையும் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது அதிர்ச்சியும், பயமும் தரக்கூடிய விசயமாக மட்டுமே ஊடகங்கள் எழுதி, பீதியைக் கிளப்பிவிடுகின்றன. ஆனால் இது அவ்வாறான பிரச்சினை மட்டுமே அல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு மருத்துவப் பயங்கரவாதிகளும் அரசும் விளையாட்டுக் காட்டுகின்ற பிரச்சினை. மக்களைப் பாதிப்படையவைக்கின்ற ஒரு குற்றப் பிரச்சினை. அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கையினால் உருவாக்கப்பட்ட, புதிய மருந்துக் கொள்கையினை இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்திய பிறகுதான், மருத்துவப் பயங்கரவாதிகள் துணிச்சலாக இந்தகைய குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் முதலாளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் மருந்து தயாரிக்க அனுமதியளித்திருக்கிறது இந்திய அரசு. அயல் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல ஆபத்தான மருந்துகளும் கூட இந்தியாவில் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் வெளிப்படையாகவும், சில மருந்துகள் ரகசியமாகவும் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இப்பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு இந்திய மக்களைப் பயன்படுத்துகின்றன. 2001 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு அமெரிக்கக் கம்பெனியின் புதிய மருந்தினை மக்கள் மீது பரிசோதனை செய்து பார்த்த செய்தி வெளிவந்ததைப் பார்த்தோம். இந்தப் பரிசோதனை செய்வதிலேயே ஆண்டொண்டிற்கு ஒரு மருந்துக்கு சுமார் 1500 கோடி ரூபாய்கள் சம்பாதிக்கின்றன. எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் நடத்தப்படுகின்ற இந்தப் பல்வகைக் கொள்ளைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் காலாவதி, மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்து செய்யும் விற்பனை. போலி மருந்துகளின் விற்பனையில் மட்டும் இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய் புழங்குவதாக முன்னர் அவுட்லுக் ஏடு வெளியிட்டிருந்தது.

துவக்கத்தில், புகார்கள் வந்தபோது போலியான மற்றும் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய போலீசும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சென்றார்கள். ஒரு பத்திரிக்கையாளர், ”மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறதே”, எனக் கேட்கிறார், ”அவர்களும் எங்களோடுதான் வருகிறார்கள், அவர்கள்தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்கள், அவர்கள் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று பதில் கூறுகிறது போலீசு.

பல இடங்களில், பலகோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கிட்டங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தமிழகமெங்கும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடரவும் சுதாரித்த மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், ”போதுமான அதிகாரிகள் இல்லை, தமிழ்நாடு முழுவதிற்குமே 50 பேர்தான் இருக்கிறோம். எனவே, எங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லை” எனப் பதட்டத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில் மருந்துக்கடைக்காரர்கள் தங்களிடமிருக்கும் காலாவதியான மருந்துகளை நள்ளிரவுகளில் சாக்கடைகளிலே கொட்டுகிற வேலையும் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. மருந்து விற்பனையாளர்கள் சங்கமோ, கடைகளை ஆய்வு செய்ய வரும்போது, போலீசு வரக்கூடாது, அதிகாரிகள் மட்டும் வந்தால் போதும். எங்களது கடைகளின் முன்னால் ”இந்தக்கடையில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படவில்லை” என்று போர்டு மாட்டி வைத்துவிடுகிறோம், என அறிக்கை விடுகிறார்கள். மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இனி போலீசுமல்லவா மாமூலுக்கு வந்துவிடும் என்பது அவர்கள் கவலை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இவர்களின் வாக்குமூலமே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 50 பேர் போதாது என்றால் அதை அதிகரிப்பதற்காக மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள்? அவர்களது சங்கம் இதற்காகப் போராடியதுண்டா? ஆட்களைக் கூடுதலாக நியமித்தால் பங்குத்தொகை குறைந்துவிடுமே என்பதற்காகத் தானே இவர்கள் பேசாமல் இருந்தார்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சினை இது! உண்மையாகவே, ஒரு உயிராதாரமான இந்தப் பிரச்சினையில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்பதோடு அதை அலட்சியமானதாகவும் நினைக்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அலட்சியப்படுத்தக் கூடிய கூட்டமே மக்கள் என்கிற சிந்தனையில் அரசாங்கமே இருக்கும் போது அதன் ஊழியர்கள் மட்டும் வேறுமாதிரியாகவா இருப்பார்கள்!.

மருந்துக்கடைக்காரர்களோ மாதந்தோறும் மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாமூல் கொடுக்கிறார்கள். திருட்டுசி.டி, கள்ளநோட்டு, போலிமது, என்கிற வரிசையில் மருந்தையும் சேர்த்துவைத்து கப்பம் கட்டுவதுதானே இங்கே நடந்துகொண்டிருக்கிற உண்மை.

அரசு மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல், இந்த குற்றங்கள் நடந்திருக்கும் என்பதை முட்டாள் கூட நம்பமாட்டான். ஆனால் எல்லோரையுமே அடிமுட்டாள்களாக நினைத்துக் கொண்டு கதைகதையாய் அவிழ்த்துவிடுகிறார்கள் அரசு அதிகாரிகள். அவர்கள் மாதந்தோறும் கப்பம் கட்டுகிற ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையே அவர்களை அவ்வாறு பேசவைக்கிறது.

மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, மருந்து விற்பனையாளர்களே அரசியல்வாதிகளின் செல்வாக்கோடுதான் இந்தக் குற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, தற்போது பிடிபட்டிருக்கிற மீனா ஹெல்த்கேர் மற்றும் வசந்தா பார்மசி நிறுவனத்தின் உரிமையாளன் காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினரென்றும் அவருக்காக வங்கியில் 150 கோடிரூபாய்களுக்கும் மேல் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறாரென்றும் தினகரன் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு ஆஸ்தான வழக்கறிஞர் என்பது நாமறிந்ததே!.

மருத்துவத்திற்கான மருந்துகள் மட்டுமல்ல, விவசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் காலாவதியும் போலியும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அது அசலாக வேலை செய்வது மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளச் சாப்பிடும்போது மட்டும்தான்.

இன்று போலி மற்றும் காலாவதி மருந்துகளை ஆய்வுசெய்து கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார்கள். காலாவதியான மருந்துகளைப் பழைய பேக்கிங்களிலிருந்து பிரித்து எடுத்து புதிய பேக்கிங்குகளில் வைத்திருக்கிறார்களென்றால், காலாவதியான மருந்துகள் எவை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு அட்டையிலிருந்து ஒரு மாத்திரையை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்து போலி இல்லை அல்லது காலாவதி இல்லை என்று சொன்னால், அதே அட்டையிலுள்ள இன்னொரு மாத்திரை போலியானது இல்லை என்று மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உத்திரவாதம் தர முடியுமா? முடியாது. இதே போன்றுதான் ஊசிமருந்துகளையும் கண்டுபிடிக்க முடியாது, குழந்தைகளுக்கான ஸிரப் போன்றவைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சோதனை செய்தாலொழிய, போலிகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் போலிகளே இல்லை என்று மருத்துவ இணை இயக்குநர் பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்திருக்கிறார். இதற்கும், ப,சிதம்பரம்- மீனாட்சி சுந்தரம்- உறவினர்- சிவகங்கை மாவட்டம் என்பதற்கும் சம்பந்தமில்லாமலா இருக்கும்.

போலியான, காலாவதியான மருந்துகள் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக தமிழகம் முழுவதுமுள்ள இருப்பு மருந்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தி விட்டு நன்கு சோதிக்கப்பட்ட புதிய மருந்துகளை விற்பனை செய்ய வைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்பதற்கு நம்பிக்கை தரக்கூடிய எதுவும் தமிழகத்தில் இல்லை. .மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர.
-வினவு

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்