இணையத்தில்இஸ்லாம்‏ ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 12 அக்டோபர், 2009

இணையத்தில்இஸ்லாம்‏

இருபதாம் நூற்றாண்டின்
இறுதியில் இந்த உலகம் ஒரு
மாபெரும் புரட்சியைக்
கண்டது. ஆம் அது தான் இணையப்
புரட்சி. உலகின் ஒவ்வொரு மூலை
முடுக்குகளிலும் இப்புரட்சி
பரவியது. அனைத்து வகை
மக்களிடமும் இப் புரட்சி தன்
முத்திரையைப் பதித்தது.

இணையப் புரட்சி தோன்றிய
பின்னர் தான் கணிணியின்
உபயோகம் வெகுவாக வளர்ந்தது.
அதற்கு முன் வரை அரசு
அலுவலகங்களிலும் பெரும்
நிறுவனங்களிலும் மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வந்த
கணிணிகள் சாதாரண மனிதர்களும்
பயன்படுத்தும் அளவுக்கு
பரவலான பயன்பாட்டுக்கு
வந்தது இணையப் புரட்சிக்குப்
பின்னர் தான்.

உலகளாவிய அளவில் தேசங்கள்,
இயக்கங்கள்;, மற்றும் வியாபார
நிறுவனங்கள் ஆகியவற்றின்
வளர்ச்சிக்குப் பயன்பட்ட
இந்த ஊடகம் தனி மனிதனுக்கும்
பயன்பட ஆரம்பித்தபோது
இதற்காகவே காத்திருந்தது
போல் முஸ்லிம்களும் தமது
ஏகத்துவக் கொள்கையை
இகமெங்கும் பரப்ப இந்த
அற்புத ஊடகத்தை பயன்படுத்தத்
தொடங்கினர்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்
வார்த்தைகளை இணைய தேடுதலில்
இட்டு தட்டினால் எண்ணற்ற
இணைய தளங்கள் நம் பார்வையில்
வந்து நம்மைத் திகைக்க
வைக்கின்றன.

கணிணியைப் பயன்படுத்தவும்
இணைய தளங்களில் உலா வரவும்
ஆங்கிலம் தெரிந்திருக்க
வேண்டும் என்பதெல்லாம்
அந்தக் காலம். இனிய தமிழில்
இஸ்லாத்தைப் பரப்பவும்,
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் எதிராக
இணைய உலகில் எடுத்து
வைக்கப்படும்
குற்;றச்சாட்டுகளுக்கு
உடனுக்குடன் பதிலளிக்கவும்
ஏராளமான இணைய தளங்கள் தம்
பணியை இனிய தமிழில் செவ்வனே
செய்துக் கொண்டிருக்கின்றன.
அல்ஹம்து லில்லாஹ்.

தமிழ் இணைய உலகில் மார்க்கச்
சேவை புரியும் இணைய
தளங்களில் விரல் விட்டு
எண்ணக் கூடிய ஒன்றிரண்டைத்
தவிர பெரும்பாலானவை
ஏகத்துவக் கொள்கையை
எடுத்துவைக்கும் சிறந்த இணைய
தளங்களாகத் திகழ்வதும், ஒரு
சில விஷயங்களில் கருத்து
வேறுபாடுகளைக்
கொண்டிருந்தாலும் தமிழ்கூறு
நல்லுலகிற்கு ஏகத்துவக்
கொள்கைளை எடுத்துரைப்பதில்
தமது பங்களிப்பை நல்கி
வருவதும் மகிழ்ச்சிக்குரிய
செய்திகளாகும்.

பத்திரிகைகளும் மற்றும் தொலை
ஊடகங்களும் இருட்டடிப்பு
செய்கின்ற இஸ்லாமிய உலகச்
செய்திகளை உடனுக்குடன்
தருகின்ற பல்வேறு இணைய
தளங்கள் ஒரு வகையில்
சமுதாயத்துக்கு தொண்டு
செய்கின்றன என்று தான் சொல்ல
வேண்டும்.

இளைய சமுதாயத்தின்
இதயங்களில் வக்கிர
எண்ணங்களைத் தோற்றுவிக்கும்
தரம் கெட்ட இணைய தளங்களுக்கு
மத்தியில் நாகரீகத்துடன்
நல்ல பண்பாட்டை வளர்க்கும்
இஸ்லாமிய இணைய தளங்கள் நல்ல
இளைஞர்களுக்கு ஒரு
வரப்பிரசாதம் என்று சொன்னால்
அது மிகையாகாது.

இஸ்லாத்தைப் பற்றி அறிந்துக்
கொள்ள இஸ்லாமிய இணைய
தளங்களைத் தேடுபவர்கள்
மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் களங்கம்
கற்பிக்கக் களம் இறங்கிய சில
கயவர்கள் பல நூற்றாண்டுகளாக
பல்வேறு முயற்சிகள் செய்து
தங்கள் முயற்சிகளில்
படுதோல்வியைச் சந்தித்த
பின்னர் இப்போது இணைய தளம்
என்னும் இந்த நவீன
ஊடகத்திலும் தங்கள்
கைவரிசையைக் காட்டி
வருகின்றனர். இஸ்லாத்தின்
பெயரைப் பயன்படுத்தி
இஸ்லாமிய கருத்துக்களை
தலைப்புகளாகத் தந்து திருமறை
வசனங்களையும் திருநபியின்
மணிமொழிகளையும் தங்கள்
விருப்பத்திற்கு வளைத்தும்
திரித்தும் எழுதி ஆலகால
விஷத்தை சுவையான இனிப்புப்
பண்டங்களைப் போல் தயாரித்து
வியாபாரம் செய்து
வருகின்றனர்.

இந்தக் கயவர்களின்
முகமூடியைக் கிழித்தெறிந்து
இணைய உலகில் இவர்களை
அடையாளம் காட்டும் சிறந்த
பணியை சில நல்லோர்கள் செய்து
வருகின்றனர். இருந்தாலும்
உண்மை வீட்டை விட்டுப்
புறப்படுவதற்குள் பொய் ஊரைச்
சுற்றி விட்டு வந்து விடும்
என்று சொல்வதைப் போல் இந்தக்
கயவர்களின் கைவரிசையில்
உருவான கள்ள இணைய தளங்கள்
அழகான பொய்களுடன் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன என்பதை
இணைய தளங்களைப் பார்வையிடும்
ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும்
உணர்ந்து அவற்றிலிருந்து
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும்.

எவ்வளவு தான் தங்களை
மறைத்துக் கொண்டாலும்
பத்திரிக்கைள் மற்றுத்
தொலைக் காட்சி ஊடகங்களில்
வெகு விரைவில் இவர்களின்
முகத்திகை; கிழிந்து விடும்,
ஆனால் இந்த இணைய தளம் என்னும்
ஊடகத்தில் தங்களை மறைத்துக்
கொண்டு கபட நாடகம் ஆடும்
கயவர்களைக் கண்டறிவது சற்று
சிரமம். எனவே தான் நேருக்கு
நேர் மோதத் திராணியற்றவர்கள்
இணையத்தின் மூலம்
புறமுதுகில் குத்தும்
கோழைத்தனமான செயவ்களில்
ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே இஸ்லாத்தின் பெயரால்
இயங்கும் இணைய தளங்கள்
உண்மையிலேயே இஸ்லாமிய இணைய
தளங்கள் தானா? என்பதை
உறுதிப்படுத்திக் கொண்ட
பின்னரே அத்தளங்களைப்
பார்வையிட வேண்டும்.
இல்லையேல் நமது பொன்னான
நேரமும் பொருளும் விரயம்
ஆவது மட்டுமின்றி இருக்கின்ற
ஈமானையும் இழக்க நேரிடும்.

பொதுவாகவே இணைய தளங்களை
உருவாக்குவதும் அதனைத்
தொடர்ந்து நடத்துவதும்
அனைவராலும் இயலாத ஒன்று.
சமுதாய இயக்கங்கள் அல்லது
சேவை மனப்பான்மைக் கொண்ட
சிலர் குழுக்களாகச் சேர்ந்து
இணைய தளங்களை நடத்தி
வருகின்றனர். அத்தகைய புகழ்
பெற்ற இணைய தளங்கள் மட்டுமே
சரியான தகவல்களை தந்துக்
கொண்டிருக்கின்றன. இவற்றில்
மட்டுமே நமது கவனம் இருக்க
வேண்டும்.இஸ்லாமியத் தமிழ்
இணைய தளங்கள்; சில சமயம்
தங்களுக்குள் ஏற்படும்
கருத்துவேறுபாடுகளையும்
மனமாச்சரியங்களையும்
வெளிச்சம் போட்டுக்
காட்டுவது வருந்தத்தக்க
விஷயமாகும். அப்படிப்பட்ட
இணைய தளங்களைப்
பார்வையிடும்போது அதில் உள்ள
நல்லவற்றை எடுத்தக் கொண்டு
அல்லவற்தை; தள்ளிவிடலாம்.
புகழ் பெற்ற அந்த இணைய
தளங்களை நடத்துவோருக்கு ஓர்
அன்பான வேண்டுகோள். தயவு
செய்து தனிமனித
விமரிசனங்களையும் தரம் கெட்ட
தாக்குதல்களையும் சற்று
ஒதுக்கிவைத்து விட்டு
சமுதாயத்திற்குப் பயனுள்ள
செய்திகளை, மார்க்க
விஷயங்களை, இறை வேத வரிகளை,
இறைத்தூதர் மொழிகளை இஸ்லாமிய
சமுதாயத்திற்கு மத்தியில்
இன்னும் அதிகமாகக் கொண்டு
செல்லுங்கள். ஏகத்துவக்
கொள்கையை இன்னும் உரத்த
குரலில் முழங்குங்கள்.
எதிர்கால சமுதாயம் இதன்
மூலம் பயனடையும். பயனைடந்த
உள்ளங்கள் உங்களை மனமார
வாழ்த்தும்.

இணைய தளங்கள் என்னும் வலைத்
தளங்களின் ஓர் அங்கம் தான்
வலைப் பதிவுகள் எனப்பும்
வலைப்பூக்கள். பல
நிறுவனங்கள் இந்த வலைப்பதிவு
சேவையை இலவசமாகவே
வழங்குவதாலும், கையாள்வது
எளிது என்பதாலும் இணைய
உலகில் தொடர்புடைய
ஏராளமானேர் வலைப்பதிவுகனை
உருவாக்கி தங்கள்
கருத்துக்களையும்
ஆக்கங்களையும் பதிந்து
வருகின்றனர்.

வலைத் தளங்களை விட அதிகமாகவே
இந்த வலைப்பதிவுகள்
எனப்படும் வலைப்பூக்கள் இணைய
உலகில் உலாவந்துக்
கொண்டிருக்கின்றனவோ எனக்
கருதும் அளவுக்கு நாளுக்கு
நாள் புத்தம் புதிய
வலைப்பூக்கள் பூத்துக்
கொண்டிருக்கின்றன.

வலைத்தளங்களை நல்லவையும்
தீயவையும் ஆக்கிரமித்துக்
கொண்டிருப்பது போல் அதை
விடவும் சற்று அதிகமாகவே
வலைப்பூக்களையும்
நல்லவையும் தீயவையும்
ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கின்றன எனலாம்.
வலைத்தளங்களைப் பற்றிக்
குறிப்பிட்ட அனைத்துமே இந்த
வலைப்பூக்களுக்கும்
பொருந்தும்.

முறையாகப் பதியப்பட்டு
நெறிமுறையுடன் நடத்தப்படும்
இணைய தளங்களில் தங்கள்
மூக்கை நுழைக்க முடியாத
முகவரியற்றவர்கள்
வலைப்பதிவுகளைப்
பயன்படுத்தி தங்கள் வக்கிர
எண்ணங்களையும் தரம் கெட்ட
தகவல்களையும் பதிந்து
வருகின்றனர்.

வலைப்பதிவுகளை
பார்வையிடுவதை வழக்கமாகக்
கொண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள்
இதிலும் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும்.
இஸ்லாத்தின் பெயரால்
இல்லாததையம் பொல்லாததையும்
பதிக்கின்ற வலைப்பதிவுகளை
அடையாளம் கண்டு அவற்றை
அடியோடு புறக்கணிக்க
வேண்டும்.

இந்திய மொழிகளிலேயே அதிக
அளவில் பதியப்படும்
வலைப்பதிவுகள் நம் தாய்
மொழியாம் தமிழ் மொழியில்
தானோ என நினைக்கும் அளவுக்கு
தமிழ் வலைப்பதிவுகள் இணைய
உலகில் உலா வந்துக்
கொண்டிருக்கின்றன. புகழ்
பெற்ற வலைத் திரட்டிகளில்
சென்று பார்வையிட்டால் நாள்
தோறும் புத்தம் புதிய
வலைப்பூக்கள் பூத்துக்
கொண்டிருப்பதைக் காணலாம்.
அவற்றில் பெரும்பாலானவை
ஒன்றுக்கும் உதவாதவை என்பது
வேறு விஷயம். பூக்களை
நேசிப்பவர்களே நறுமணம்
கமழும் நல்ல பூக்களை மட்டுமே
நேசியுங்கள். ஆம் நல்ல வலைப்
பதிவுகளைத் தேடிப் பிடித்து
பயன் பெறுங்கள்.

இணைய உலகில் உலா வந்துக்
கொண்டிருக்கும் தமிழ் நேய
நெஞ்சங்களே! மிகவும் கவனமாக
இருங்கள். நமது எதிரிகள் நம்
மீது பன் முனைத் தாக்குதலை
மேற்கொண்டிருக்கின்றனர்
என்பதை மறந்து விடாதீர்கள்.
'இஸ்லாம்' 'முஸ்லிம்' என்ற
வார்த்தைகளைப் பயன்படுத்தி
வலைப் பதிவுகளை உருவாக்கி
இஸ்லாத்துக்கும்
முஸ்லிம்களுக்கும் எதிராக
எழுதும் எழுத்துக்கள் ஒரு
புறம், மறுமொழி இடுகின்ற
வசதியைப் பயன்படுத்தி
இஸ்லாமிய வலைப்பதிவுகளில்
முஸ்லிம் பெயர்களில் நச்சுக்
கருத்துக்களைப் புகுத்தும்
சதி வேலைகள் மறுபுறம், இப்படி
அனைத்து தரப்பிலிருந்தும்
நம்மைத் தாக்க எதிரிகள்
திட்டம் வகுத்து
செயல்படுகின்றனர். எனவே
வலைப் பதிவுகளை உருவாக்கி
பதிப்பவர்கள் உங்கள்
பதிவுகளில் பதியப்படும்
மறுமொழிகளை ஆய்வு செய்து
வெளியிடும் வசதியைப்
பயன்படுத்துங்கள் இல்லையேல்
தறுதலைகள் தவறான
கருத்துக்களை உங்கள்
பதிவுகளில் பதிந்து விடுவர்
எச்சரிக்கை.

தமிழறிந்த முஸ்லிம்களில்
பலர் பல்வேறு பெயர்களில்
வலைப்பதிவுகளை
பதிக்கின்றனர். இதில்
வருந்தத்தக்க விஷயம்
என்னவெனில், இவர்களில் சிலர்
தமக்கு வேண்டாத, தமக்குப்
பிடிக்காத, கொள்கையில்
கருத்து வேறுபாடு கொண்ட, தனி
நபர்களையும், இயக்கங்களையும்
விமர்சித்தும் புழுதி
வாரித்தூற்றியும் பதிவுகள்
பதிக்கின்றனர்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு
படி மேலே சென்று நாலாந்தர
நரகல் நடையில், படிப்பவர்கள்
வெறுப்படையும் விதத்தில்
பதிக்கின்ற பதிவுகளைக்
காணும் போது உண்மையிலேயே
மனதுக்கு மிகவும் வேதனையாக
உள்ளது. உண்மையில் இவர்கள்
முஸ்லிம்கள் தானா? என்று
சந்தேகம் வருகின்றது.
மார்க்க ஞானத்தை வளர்த்துக்
கொள்ளவும், அறிவாற்றலைப்
பெருக்கிக் கொள்ளவும்
வலைப்பதிவுகளை நோக்கி நாம்
பயணித்தால் நம்மை நரகப் படு
குழி நோக்கி கொண்டு
சேர்க்கும் வேலையை சில
வலைப்பதிவர்கள் செய்து
வருகின்றனர். இத்தகைய வலைப்
பதிவுகள் நல்லவர்களை முகம்
சுளிக்க வைக்கின்றன. தனி
மனிதத் தாக்குதல் நடத்தும்
முஸ்லிம் பெயர் தாங்கிகளாகிய
இந்த முனாபிக்குகள் உண்மையான
மூமின்களாக மாற இறைவனிடம்
பிரார்த்திப்போம்.

வலைப்பதிவுகளை உருவாக்கி
பதிந்து வரும் சகோதார்களே!
உங்கள் இறையச்சம் எங்கே
போனது? உங்கள் இஸ்லாமியப்
பண்பாடும் நபி (ஸல்) அவர்கள்
கற்றுத் தந்த நற்குணங்களும்
எங்கே போயின? பித்னாக்களைப்
பரப்பும் உங்கள் முயற்சிகளை
ஓரங்கட்டி விட்டு இனியாவது
இஸ்லாத்தைப் பரப்பும்
வேலையில் உங்கள் பொன்னான
நேரத்தைச் செலவிடுங்கள்.
இஸ்லாம் சென்றடையாத
இதயங்களில் இஸ்லாத்தைக்
கொண்டு சேர்க்க உங்கள்
பதிவுகள் பயன்படட்டும்.
உண்மை இஸ்லாத்தை உணராத
முஸ்லிம்களுக்கு உங்கள்
பதிவுகள் வழிகாட்டட்டும்.

மூமின்களே! (சந்தேகமான) பல
எண்ணங்களிலிருந்தும்
விலகிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் நிச்சயமாக
எண்ணங்களில் சில பாவங்களாக
இருக்கும்.(பிறர் குறைகளைத்)
துருவித் துருவி ஆராய்ந்துக்
கொண்டிராதீர்கள். அன்றியும்
உங்களில் சிலர் சிலரைப்
பற்றிப் புறம் பேசவேண்டாம்.
உங்களில் எவராவது தம்முடைய
இறந்த சகோதரனின் மாமிசத்தைப்
புசிக்க விரும்புவாரா? (இல்லை)
அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை
அஞ்சுங்கள். நிச்சயமாக
பாவத்திலிருந்து மீள்வதை
அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்.
மிக்க கிருபை செய்பவன்.
(அல்குர்ஆன் 49:12)

உங்கள் சகோதரனின்
மாமிசத்தைப் புசிக்க நீங்கள்
வீரும்புவீர்களா,
தினந்தோறும் உங்கள் சொந்த
சகோதரனின் மாமிசத்தைப்
புசித்துக்
கொண்டிருக்கிறீர்களே இந்த
இறைவசனம் எப்படி
உங்களுக்குத் தெரியாமற்
போனது?

நீங்கள் பதியும் தனிமனிதக்
குறைகள் உண்மையிலேயே
உங்களால் விமர்சிக்கப்படும்
நபர்களிடம் இருந்தால்
தனிப்பட்ட முறையில்
அவர்களுக்கு தெரியப்படுத்தி
அவர்களைத் திருத்துங்கள்.
அதற்கு மேலும் அவர்கள்
திருந்தவில்லையென்றால் இனி
அவர்களாகட்டும்
இறைவனாகட்டும். அதைவிட்டு
விட்டு, நீங்கள் மென்மேலும்
பாவத்தைச் சம்பாதித்துக்
கொண்டும், சமுதாயத்தில்
குழப்பத்தை உண்டு பண்ணிக்
கொண்டும்; இருக்காதீர்கள்.
அல்லாஹ் குழப்பம்
விளைவிப்போரை
விரும்பமாட்டான் (அல்குர்ஆன்
5:64)

இணையத்தின் இன்னொரு
சிறப்பம்சம் மின்னஞ்சல்
வசதி. தொலைபேசி உபயோகம்
பரவலாக வந்துவிட்ட பின்னர்
பொதுவாகவே கடிதம் எழுதும்
வழக்கம் வெகுவாக குறைந்து
விட்டாலும் மின்னஞ்சல்
உபயோகம் வெகுவாக வளர்ந்து
விட்டது. தகவல்களைப்
பரிமாறிக் கொள்ள இணைய
உபயோகிப்பாளர்கள்
மின்னஞ்சல் வசதியை மிக
அதிகமாகப்
பயன்படுத்துகின்றனர்.

பொதுவான மற்றும் சமுதாயச்
செய்திகளையும் திருமறை
வசனங்களையும் நபி
மொழிகளையும் பயனுள்ள
கட்டுரைகளையும் ஒருவருக்
கொருவர் அனுப்பியும்
பெற்றும் பயனடைகின்றனர்.
பயனுள்ள பல செய்திகளுக்காக
இந்த மின்னஞ்சல் வசதி
பயன்படுத்தப்பட்டாலும் சில
சமயம் சில வழிகேடர்களால் இது
தவறான நோக்கங்களுக்காகவும்
பயன்படுத்தப்படுபவது
வேதனைக்குரியது.

முகம் காணா நண்பர்கள்
அனுப்பும் மின்னஞ்சல்கள்
பெரும்பாலும் பயனுள்ள பல
செய்திகளைத் தாங்கி
வந்தாலும் சில மின்னஞ்சல்கள்
ஒன்றுக்கும் உதவாத
உதவாக்கரைச் செய்திகளையும்
தாங்கி வந்து
கொண்டிருக்கின்றன.
வலைத்தளங்கள் மூலமாகவும்
வலைப்பதிவுகள் மூலமாகவும்
பரப்பிய அவதூறுகளும்
அசிங்கங்களும் போதாதென்று
சில முனாபிக்குகள்
மின்னஞ்சல் மூலமாகவும்
பித்னாக்களை பரப்புவதை தமது
முழுநேரத் தொழிலாகக்
கொண்டுள்ளனர். இவர்களுக்குத்
தான் வேறு வேலை எதுவும் இல்லை
என்றால் தமது அத்தியாவசியத்
தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்தும் மின்னஞ்சல்
சேவை உபயோகிப்பாளர்கள்
பலரின், நேரத்தை வீணடித்து,
மனதைப் புண்படுத்தி
பொருளாதாரத்தைப்
பாழ்படுத்தி வெறுப்புக்கும்
ஆளாகின்றனர்.

முழுக்க முழுக்க புறம்
பேசுவதையும், அவதூறுகளை
அள்ளி இறைப்பதையும் தமது
முழுநேரத் தொழிலாகக் கொண்ட
சிலர் அனுப்பும்
மின்னஞ்சல்களில்
தப்பித்தவறி கூட நல்ல
செய்திகள் இடம் பெறாமல்
மிகவும் கவனமாகப் பார்த்துக்
கொள்கின்றனர். தன் சொந்த
சகோதரனின் மாமிசத்தை தான்
புசித்தது போதாதென்று
மற்றவர்களும் புசிக்க பங்கு
வைக்கின்றனர்.

சர்வசாதாரணமாகப் புறம்
பேசித்திரியும் சகோதரர்களே
கீழ்க்காணும் நபி மொழியை
கொஞ்சம் நினைவு படுத்திக்
கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்கள்
மக்கா அல்லது மதீனாவில் ஒரு
தோட்டத்தின் பக்கமாகச்
சென்று கொண்டிருந்த போது
கப்ரில் வேதனை செய்யப்படும்
இரண்டு மனிதர்களின்
சப்தத்தைச் செவியுற்றார்கள்.
அப்போது 'இவர்கள் இருவரும்
வேதனை செய்யப்படுகிறார்கள்
ஒரு பெரிய விஷயத்திற்காக
(பாவத்திற்காக) இவர்கள்
இருவரும் வேதனை
செய்யப்படவில்லை' என்று
சொல்லி விட்டு, இருப்பினும்
(அது பெரிய விஷயம் தான்)
அவ்விருவரில் ஒருவர் தாம்
சிறு நீர் கழிக்கும் போது
மறைப்பதில்லை, மற்றொருவர்
புறம் பேசித் திரிந்தார்'
என்று கூறிவிட்டு ஒரு
பேரீச்ச மட்டையக் கொண்டு
வரச் சொல்லி அதை இரண்டாகப்
பிளந்து ஒவ்வொரு கப்ரின்
மீதும் ஒரு துண்டை
வைத்தார்கள். அது பற்றி நபி
(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன்
இவ்வாறு செய்தீர்கள்? என்று
கேட்கப்பட்டதற்கு 'அந்த
இரண்டு மட்டைத் துண்டுகளும்
காயாமல் இருக்கும்
போதெல்லாம் அவர்கள் இருவரின்
வேதனை குறைக்கப்படக் கூடும்'
என்று இறைத் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள் என
இப்னு அப்பாஸ் (ரலி)
அறிவித்தார். (ஆதாரம் :புகாரி
பாகம் 1 எண் 218)

இப்போதும் கப்ருகளில் பச்சை
மட்டையை வைப்பதற்கு ஆதாரமாக
இந்த ஹதீஸை எடுத்துக்
கொள்ளாமல், கப்ரில் வேதனை
நடப்பதற்கு அண்ணல் நபி (ஸல்)
கூறிய இரண்டு காரணங்களில்
ஒன்றாகிய புறம்
பேசித்திரிபவருக்குக்
கிடைக்கும் தண்டணைக்கு
ஆதாரமாக இந்த ஹதீஸை
எடுத்துக் கொள்ளுங்கள்.
இனியாவது திருந்துங்கள்.

இணைய தளங்களில் அதிகம்
உலாவரும் வாய்ப்பும்
வசதியும் கொண்டவர்களே!
உங்கள் பொன்னான நேரத்தை
வீணாகக் கழிக்காமல், நித்திய
வாழ்க்கைக்கு சரியான
வழிகாட்டி உங்களை
நேர்வழியில் நடத்திச்
செல்லும் இஸ்லாமிய இணைய
தளங்களை பார்வையிடுங்கள்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில்
ஆர்வமிக்க எழுத்தாளர்களே!
சொந்தமாக வலைப் பதிவுகளை
உருவாக்கி சமுதாயம் பயன்
பெறத்தக்க உங்கள்
ஆக்கங்களைப் பதியுங்கள்.
உங்களைக் கொண்டு ஒருவர்
நேர்வழி பெற்றாலும் அதற்கான
உயர்ந்த கூலி இறைவனிடம்
கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
உருவாக்கும் இலவச சேவையை
பல்வேறு நிறுவனங்கள் செய்து
வருகின்றன. நீங்கள்
வழக்கமாகப் பார்வையிடும்
வலைப்பதிவுகளின்
மேற்பகுதியில் (கிரியேட்
பிளாக்) என்னும் பகுதியை
சொடுக்கினால் மிகச் சுலபமாக
உங்கள் பெயரில் சொந்த
வலைப்பதிவை உருவாக்கலாம்.
வலைப்பதிவுகளை எளிதாக
உருவாக்கும் வழிமுறைகளை
மேற்கண்ட இணைய தளங்களில்
கொடுக்கப்பட்டுள்ள
தொடுப்புகள் மூலம் அறியலாம்.
உங்கள் வலைப்பதிவுகளை புகழ்
பெற்ற வலைப்பதிவுத்
திரட்டிகளில் பதிந்துக்
கொள்ளுங்கள், இலகுவாக
எவ்லோரையும் உங்கள் பதிவுகள்
சென்றடையும். பதிவுகளில்
எழுதும் போது பலருக்கும்
உபயோகமான நல்ல கருத்துக்களை
மட்டுமே எழுதுங்கள்.

பல்வேறு வலைப் பதிவுகளைப்
பார்வையிட நேரிட்டால்
அவற்றில் இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் எதிரான
விஷமக் கருத்துக்களைக்
காணும்போது உடனுக்குடன்
அதற்குப் பின்னூட்டம்
இடுங்கள். பின்னூட்டம்
இடும்போது நாகரீகத்தையும்
நளினத்தையும்
கடைப்பிடியுங்கள்.
அறியாமையாலும் இஸ்லாத்தைப்
பற்றிச் சரியாகப் புரிந்துக்
கொள்ளாததாலும் சிலர் தவறாக
எழுதக்கூடும். மென்மையான
அணுகுமுறை அவர்கள்
திருந்துவதற்கு வழி
ஏற்படுத்தும்.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே
அறியாமை இருளகற்றி
அல்லாஹ்வின் திருமறையையும்
அவனது திருத்தூதரின்
வழிமுறைகளையும் தெளிவாகப்
புரியவைப்போம். அழைப்புப்
பணிக்கு இந்த இணையம் என்னும்
ஊடகத்தைப் பயன்படுத்தி இனிய
இஸ்லாத்தை இகமெங்கும்
எடுத்துச் செல்வோம். சகோதர
சமுதாயத்தினரின்
உள்ளங்களில் ஏற்பட்டுள்ள
தவறான புரிதல்களைக் களைந்து
உண்மை இஸ்லாத்தை உலகறிய
எடுத்துரைப்போம். அஞ்ஞானம்
என்னும் இருள் கவ்விக்
கிடக்கும் உலகின் அனைத்துப்
பகுதிகளிலும் இணையம் என்னும்
இந்த விஞ்ஞானக்
கண்டுபிடிப்பைப்
பயன்படுத்தி இஸ்லாம் என்னும்
ஒளி விளக்கை ஏற்றி வைப்போம்.
சத்திய மார்க்கம் இஸ்லாம்
சகல உலகையும் சரியான வழி
நடத்தும் இன்ஷா அல்லாஹ்.

http://tamilsaral.com/news%3Fid%3D748.do

அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்