‎சமூக இணையதளங்கள்‬:‎ வரமா‬? ‎சாபமா‬? ~ சஹாரா தமிழ்

ads

சனி, 11 ஜூலை, 2015

‎சமூக இணையதளங்கள்‬:‎ வரமா‬? ‎சாபமா‬?



தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.
பொறுப்புணர்வோடு; பரந்த கண்ணோட்டத்தோடு உன்னிப்பாக ஆய்வு செய்தால்; சமூக இணைய தளங்களில் பக்குவமற்ற சில முஸ்லிம் இளைஞர்கள் பதிவிடும் கருத்துக்கள்தான் பேராபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் நியாயங்களையும்,உரிமைகளையும் வெளிக்கொண்டுவரஊடகங்கள் இல்லையே என்ற பெரும் ஏக்கம் நிலவியது. அது ஒரு காலம். இன்று இணையதளம், வலைதளம், யூ டியூப் ஆகியவற்றைத் தாண்டி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் வந்தபிறகு அந்த ஏக்கம் ஓரளவு தீர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்கள் எல்லோரிடத்திலும் புழங்கத் தொடங்கியதன் விளைவு, யாரெல்லாம் சமூக இணையதளங்களில் கணக்குகளைத் தொடங்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கை ஆசிரியர்களைப் போலவும், சமுதாயப் பிரதிநிதிகள் போலவும், ஆழமான சிந்தனையாளர்கள் போலவும் கருதிக்கொண்டு மனம்போன போக்கில் கருத்துக்களை வெளியிட துணிந்துவிட்டார்கள்.

‪#‎உள்_சண்டைகள்‬
அதன் விளைவு சிறிய விஷயங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயங்கள் சந்திக்கு வருகின்றன. ஓரிறையைப் பற்றிப் பேசுபவர்கள் மத்தியில் ஓராயிரம் சண்டைகள் நடக்கின்றன.

‘‘பாவத்திலும், பகைமையிலும் உதவி செய்து கொள்ளாதீர்கள்’’ என இறைவன் குர்ஆனில் (17:36) அறிவுறுத்தியதை யாரும் கண்டுகொள்வதில்லை.

எந்த சமூகங்களிலும் இல்லாத அளவுக்கு உள்சண்டைகள், இயக்க மோதல்கள், சமூக இணைய தளங்களில் தமிழக முஸ்லிம்களுக்குமத்தியில் நடக்கிறது. வேறு எங்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் இல்லை.

இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட தமிழ் பேசும் நல்லுலகின் நண்பர்கள், இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போகிறார்கள். ‘இஸ்லாம் நல்ல மார்க்கம், ஆனால் முஸ்லிம்கள் சரியில்லை’ என்ற பெர்னாட்ஷாவின் கருத்து அவர்களுக்கு இவர்களால் நினைவூட்டப்படுகிறது.

‪#‎நட்புகளை_இழக்கும்_வேதனை‬

இதைத் தாண்டி, பீதியடையும் அளவுக்கு சில முஸ்லிம் இளைஞர்களின் சமூக இணையதள பதிவுகள் இருக்கின்றன. சங்பரிவார் சக்திகளின் கருத்துகளுக்கு எதிர்வினைப் புரிகிறோம் என்ற பெயரில் நடுநிலையாளர்களை எதிரிகளின் பக்கம் தள்ளிவிடும் பாதகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

இந்தியாவில் 20 சதவீதமாக வாழும் நாம் தமிழகத்தில் 7 சதவீதமாக இருக்கிறோம் என்பதையும், நம்மோடு வாழும் பிற சமுதாய மக்களில் 95 சதவீதம் பேர் அன்பையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் தாங்கள் சவூதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்கிறோம் என்ற கற்பனையில் பொறுப்பில்லாமல்; சிந்திக்காமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

எதிரிகள் யார்? பொதுமக்கள் யார்? என பிரித்துப் பார்க்கும் அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் பிற சமூகங்களில் இருக்கும் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்குகிறார்கள். இன்று தமிழகத்தில் பிற சமூகங்களில் இருக்கும் 95 சதவீத நடுநிலையாளர்களால்தான் சங்பரிவார் சக்திகள் ஒரு வட்டத்தை மீறி வளர முடியாமல் இருக்கிறார்கள் என்பதை மனசாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

‪#‎மிகைப்படுத்துதல்_நியாயமா‬?

இந்த நாடே இந்துத்துவ சக்திகளிடம் போய்விட்டது போலவும், நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருப்பது போலவும் சிலர் கருத்துக்களை விதைக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள்தான் தங்களையும் அறியாமல் சங்பரிவார் சக்திகளின் சதிகளுக்கு வலு சேர்க்கிறார்கள்.

நமது இருப்பிடங்களுக்கு அப்பாற்பட்டு ‘‘பன்முக சமூகங்கள் வாழும் ஒரு உலகம்’’ இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். சமூக இணையதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்கள் அனைவராலும் பார்க்கப்படுகின்றன என்ற சிறு விஷயத்தைக்கூட உணரும் நிலையில் அவர்கள் இல்லை.
‘உமக்கு எதில் தெளிவு இல்லையோ, அதில் கலந்து கொள்ளாதீர்’ என இறைவன் திருக்குர்ஆனில் (17:36) அறிவுறுத்துகிறான்.

ஆனால் ‘கருத்து பைத்தியங்களாக’ சிலர் உருவாகி முஸ்லிம் சமுதாயத்தை அழிவின் விளிம்பில் தள்ள முயற்சிக்கிறார்கள். தாங்கள் பதிவிடும் கருத்து எவ்வாறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அதை பிற சமூக மக்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்பதையும் உணர்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாய நலன் குறித்த விஷயங்களில் மௌனமாக இருப்பதே அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் சிறந்த பணியாகும்.

‪#‎இறைவனின்_எச்சரிக்கை‬

எங்கேயாவது ஒரு ஊரில் சமூகப் பதற்றம் ஏற்பட்டுவிட்டால் அது உடனே பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. பதட்டம் தூண்டப்படுகிறது. கள நிலவரங்கள் தெரியமலேயே மிகைப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை திருக்குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கிறது.

"நம்பிக்கைக் கொண்டோரே! ஒருவர் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்". திருக்குர்ஆன் (49:6)

ஆனால் பரபரப்பு செய்திகளைப் பரப்புவதில் இங்கே ஒரு போட்டியே நடக்கிறது. யாராவது ஒரு போலீஸ்காரர் அல்லது அதிகாரி முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி இழைத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவரை சரிசெய்ய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக, காவித்துறையே... எனத் தொடங்கி மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் களத்தில் பிரச்சனையைக் கையாளக் கூடியவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு,

பிரச்சனைகள் திசை மாறுகின்றன. நீதியைக் கேட்க வேண்டிய இடத்தில், மன்னிப்பு கேட்கக்கூடிய தலைகீழ் நிலை ஏற்படுகிறது. இப்படி அதிகாரிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படுவது நியாயம்தானா?

காவல்துறை அதிகாரிகளை எல்லை மீறி விமர்சிக்க கூடாது. அதில் ஒரு ஜனநாயக மரபு தேவை. அவர்கள் பணிபுரியும் இடங்களில் எல்லாம் சமுதாயத்திற்கு எதிரான மனநிலையோடு பணிபுரியும் சூழலை உருவாக்கி விடக்கூடாது. அவர்களை எச்சரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

‪#‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா‬?

முகநூலில் பதிவிடும் கருத்துக்களில் நடுநிலை இருப்பதில்லை. நளினம் இருப்பதில்லை. மதிநுட்பம் இருப்பதில்லை. நாகரீகம் இருப்பதில்லை. சாதாரண விவாதங்கள் சண்டைகளாக மாறுகின்றன.

ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டால், ‘அந்த ஆர்.எஸ்.எஸ்.காரன் அப்படி எழுதுகிறான். அதனால் அவனுக்கு அப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

தங்கமும், பித்தளையும் சமமாகுமா? ஓடையும், சாக்கடையும் ஒன்றாகுமா? நீங்களும் அவர்களும் ஒன்றா? அவர்கள் செய்யும் அதே தவறை நீங்களும் செய்யலாமா?

அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை அழகிய கருத்துக்களால் வெல்லத் தெரியவில்லை. ஆணித்தரமான வாதங்களால் தனிமைப்படுத்த தெரியவில்லை. அவரை பொதுமக்களுக்குமத்தியில் அம்பலப்படுத்த தெரியவில்லை. மாறாக காது கூசும் வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பதிவுகளைப் பார்க்கும் பொதுவானவர்கள், நமக்கு ஆதரவாகப் பேசும் நிலை மாறி ‘இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

"நபியே... மென்மையையும், மன்னிக்கும் தன்மையையும் மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!" என திருக்குர்ஆன் (7:199) இறைவன் அறிவுறுத்துகிறான்.

இதைப் புரியாத சில அறிவீனர்களின் ‘கருத்து அராஜகத்தால்’ முஸ்லிம் சமுதாயத்தின் மென்மைத்தன்மையும், மன்னிக்கும் பெருமனமும் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

‪#‎விமர்சனமும்_நாகரீகமும்‬

விமர்சனங்களில் பொறுப்புணர்வு தேவை. அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் படுகேவலமாக விமர்சிக்கிறார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்காக நமது முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழிகாட்டலாகும். இது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமான கருத்துகளை எடுத்து வைக்கலாம். ஆனால் இழிவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வருகின்றன. அந்த தலைவர்களிடமும் அதன் தொண்டர்களிடமும் எத்தகைய எதிர்விளைவுகளை மனதில் ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவில்லை.

நபிகள் நாயகம் பின்வருமாறு கூறினார்கள்:-

"ஒரு இறை நம்பிக்கையாளர் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டார். கரடுமுரடாக பேசமாட்டார்" என்றார்கள்.

ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கேள்வியை வைத்துவிட்டால், அவர் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பதிலளிக்க முயல்வதில்லை. அதுபோல சல்மான்கான், குஷ்பு போன்றோர் முஸ்லிமா? இல்லையா? என்ற தேவையற்ற விவாதம் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. அலட்சியப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

பாஜகவின் தலைவர்களின் வன்முறைக் கருத்துகளுக்கு பதிலடி என்ற பெயரில் அவர்களை விலங்குகளோடு ஒப்பிடுவதும், கேவலமாக சித்தரிப்பதும் எத்தகைய நியாயம்? கோபம் அறிவை மறைக்கிறதா? அவர்கள் செய்யும் அதே இழிவான வழிமுறைகளை நாமும் செய்ய வேண்டுமா?
அக்கட்சியின் பெண் தலைவர்களின் வன்முறைக் கருத்துக்களை நாகரீகமாக கண்டிக்கலாம். ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தலாமா? கேவலமாகத் திட்டலாமா?
பொங்கும் உணர்ச்சி மனசாட்சியை வெல்லலாமா?
இது சமுதாயத்திற்கு எப்படி நன்மையைப் பெற்றுத்தரும்? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இப்படியா எதிர்வினையாற்றச் சொன்னார்கள்? கோபம் அறிவை மறைக்கலாமா?

‘அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள்; மக்களை மன்னிப்பார்கள்’ என இறைவன் திருக்குர்ஆனில் (3:134) அறிவுறுத்துகிறான்.

‘சண்டையில் வெல்பவன் அல்ல வீரன்; கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்’ என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பெரும்பாலும் இதுபோன்ற பொறுப்பில்லாமல் செயல்படுபவர்கள் பற்றி ஆய்வு செய்தால், அவர்களில் பெரும்பாலோர் களப்பணிகளில்/நேரடி சமுதாயப் பணிகளில் ஈடுபடாதவர்கள் எனத் தெரிய வருகிறது.

அவர்கள் தூரத்தில் இருந்து எறியும் ஒரு கல், சமுதாயத்தின் மீது பாறாங்கல்லாக விழுகிறது என்பதை எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

‪#‎மனசாட்சியோடு_சிந்திப்போம்‬

மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒருவகையான மன அழுத்தத்தில் இருக்கிறது. அதற்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை. தாங்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள். பலர் இக்கருத்தை திணிக்கிறார்கள். இது நியாயமல்ல.

தமிழகத்தில் திராவிட இயக்கவாதிகளும்,தமிழ்த் தேசியவாதிகளும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினரின் தோழமை சக்திகளாகவும் பணிபுரிகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால்தான் இங்கு பாஜகவால் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க முடியவில்லை.

குஜராத் கலவரத்திற்கு எதிராக இன்றும் போராடும் தீஸ்தா செடில்வாட் ஒரு பார்சி பெண்மணி. குஜராத் கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு என தொடர்ந்து போராடும் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டும், சங்பரிவார தீவிரவாதத்தை தோலுரித்த தியாகி ஹேமந்த் கர்கரேயும், பம்பாய் கலவரத்திற்கு பால்தாக்கரேயைக் கைது செய்ய வேண்டும் என அறிக்கை அளித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவும், முஸ்லிம்களின் வாழ்வியல் துயரத்தை அம்பலப்படுத்திய நீதியரசர் சச்சாரும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த ரங்கநாத் மிஸ்ராவும் பிராமணர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

சங்பரிவார் மதவெறிக்கு எதிராக கருத்துப்போர் நடத்தும் 90 சதவீத பத்திரிக்கையாளர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் என்பதையும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும், தலித் கட்சிகளும் குரல் கொடுப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பொது களங்களிலிருந்து நம்மை நாமே தனிமைப்படுத்தி சிந்திப்பது அரசியல் அறியாமையாகும்.
இந்தியாவில் பன்முக சமூகத்தோடு கலந்து நின்றுதான் மதவெறி சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை உணரவேண்டும். இதைப் புரிந்துகொண்டு, நேர்மையான கொள்கையின் அடிப்படையில் சமூக இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வேண்டும்.

இல்லையெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் வலுப்பெற பொறுப்பற்ற இளைஞர்கள் தங்களையும் அறியாமல் உதவி செய்த வரலாற்றுத் தவறு ஏற்பட்டுவிடும்.எச்சரிக்கை!

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்